தமிழில் விக்ரமின் ‘தூள்’ படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்ற நடிகை சகுந்தலா மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஐதராபாத்தில் தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சகுந்தலா உடல் அஞ்சலிக்காக ஆந்திர திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் வைக்கப்பட்டது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
1981 ஆம் ஆண்டில் ‘ மா பூமி’ என்ற தெலுங்கு படம் மூலம் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கிய சகுந்தலா, 74 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த “பாண்டவலு பாண்டவலு தும்மேடா’ என்ற நகைச்சுவை படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி இருந்தது.
பிறப்பால் மராத்தியரான சகுந்தலா, பல்வேறு தெலுங்கு படங்களில் வில்லியாக நடித்து புகழ்பெற்றார். தமிழில் ‘தூள்’ மற்றும் ‘மச்சக்காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.