மைசூர் ‘மகாராஜா’ காலமானார்




maharajaமைசூர் ராஜவம்சத்தின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தமது 60 ஆவது வயதில் மாரடைப்பால் இன்று காலமானார்.

இன்று காலைவரை இயல்பாக அவர் இருந்தார் எனவும், மதியம் திடீரென்று அசௌகரியமாக இருந்தது என்று கூறியதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கடும் மாரடைப்பு காரணமாக மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

1953 ஆம் ஆண்டு பிறந்த அவர், இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் மைசூர் மகாராஜாவாக இருந்த ஜெயசாமராஜேந்திர உடையாரின் ஒரே மகனாவார்.

காலமான ஸ்ரீகண்டதத்த நரசிம்ம உடையாருக்கு குழந்தைகள் இல்லை.
அவர் நான்கு முறை மைசூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டமும் அவர் பெற்றிருந்தார்.
அவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு அவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது.

விளையாட்டுத்துறையில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

உலகப் புகழ்பெற்ற தசரா பண்டிகையின் போது, மன்னர் காலத்து தர்பார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதை பார்க்க வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மைசூர் வருவது குறிப்பிடத்தகுந்தது.

அவரது மரணத்தையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu