நடிகர் முரளி காலமானார்




Muraliபிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, புதனன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
1984-ம் ஆண்டு, பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. புதுவசந்தம், இதயம், பொற்காலம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், தனது கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

அழுத்தமான பாத்திரங்கள் மட்டுமன்றி, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் அவர் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ள முரளி, கடைசியாக, தனது மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். 100 வது படித்தில் நடிக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த முரளி, இன்று அகால மரணமடைந்துவிட்டார்.

அவரது உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu