இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77.
நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிறுநீரகக் கோளாறு காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு ரத்த மாற்று டலாலசிஸ் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
வியாழக்கிழமை அதிகாலை புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரது அமைச்சரவையிலிருந்து 1987-ம் ஆண்டு ராஜிநாமா செய்தார் வி.பி. சிங். பின்னர் அலகாபாத் இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
காங்கிரஸிலிருந்து விலகி, 1989-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியைத் துவக்கினார். பின்னர், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் தேசிய முன்னனியின் கூட்டணி ஆட்சியை அமைத்து பிரதமரானார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் அமல்படுத்தியதை அடுத்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
பாரதீய ஜனதா கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, 11 மாதங்களில் அவர் பதவி விலக நேரிட்டது.