தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) நேற்று நள்ளிரவு ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தச் செய்தி அந்நாட்டு ஜனாதிபதியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
நெல்சன் மண்டேலாவின் மரணத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கை வரலாறு
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மண்டேலா இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி பல ஆண்டுகளாக சிறையில் இருந்து 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் புதிய குடியரசு மலர்ந்தது.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த முதலாவது ஜனாதிபதியாக மண்டேலா 1994 ஆம் ஆண்டு பதவிஏற்று , 1999ஆம் ஆண்டு அந்த பதவியை விட்டு விலகினார்.
அமைதிக்கான நோபல் பரிசையும் நெல்சன் மண்டேலா 1993இல் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.